Sunday, October 28, 2012

கலீல் ஜிப்ரானின் பைத்தியக்காரன்

நான் எப்படி பைத்தியமானேன் என்று கேட்கிறீர்களா?

பல கடவுள்கள் பிறப்பதற்கு, நீண்ட நாட்களுக்கு முன், ஆழ்ந்த உறக்கத்திலிருந்து ஒருநாள் எழுந்தபோது, என்னுடைய முகமூடிகள் திருட்டுப் போயிருந்ததைக் கண்டேன். என்னுடைய ஏழு பிறப்புகளில் என்னை அலங்கரித்த ஏழு முகமூடிகள் அவை.

‘திருடர்கள், சபிக்கப்பட்ட திருடர்கள்’ என்று கத்திக்கொண்டே தெருவில் இறங்கி ஓடினேன்.

ஆண்களும், பெண்களும் என்னைக் கண்டு சிரித்தனர். சிலர் என்னைக் கண்டு பயந்து வீட்டுக்குள் ஓடினர்.

நான் கடைவீதியை அடைந்தபோது, கூரையில் நின்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘இதோ ஒரு பைத்தியக்காரன்’ என்று என்னைப் பார்த்துக் கத்தினான். அவன் முகத்தைப் பார்க்க நிமிர்ந்தபோது, முகமூடியற்ற என் முகத்தை சூரியன், முதல் முறையாக முத்தமிட்டது. என் ஆன்மா ஆழமான காதலில் விழுந்தது. அதுமுதல் எனக்கு முகமூடிகள் தேவைப்படவில்லை. ஆழ்ந்த அமைதியிலிருந்தபடி, ‘திருடர்கள், ஆசிர்வதிக்கப்பட்ட திருடர்கள்’ என்று அழுதேன்.

இப்படித்தான் நான் பைத்தியமானேன்.

என்னுடைய பைத்தியக்காரத்தனத்தில், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொண்டேன்; தனிமையின் சுதந்திரம் மற்றும் புரிந்துகொள்ளப் படுவதிலிருந்து பாதுகாப்பு; நம்மைப் புரிந்து கொள்வதன்மூலம், நம்மில் எதையோ அடிமையாக்குபவர்களிடம் இருந்து.

என்னுடைய பாதுகாப்பு குறித்து நான் கர்வப்படாமல் இருக்கட்டும். சிறையிலிருக்கும் திருடன்கூட, இன்னொரு திருடனிடமிருந்து பாதுகாப்பாகவே இருக்கிறான்.
*
சூரிய உதயத்தின்போது ஒரு நரி தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக் கொண்டது, ‘இன்று உணவாக ஒரு ஒட்டகத்தை சாப்பிடுவேன்’.

பிறகு, பகல் முழுவதும் ஒட்டகத்தைத் தேடி அலைந்தது.

மதியத்தில் தன் நிழலைப் பார்த்தபின் சொல்லிக்கொண்டது, ‘ஒரு எலியே போதும்’.
*

நேற்று இரவு ஒரு புதிய சந்தோஷத்தைக் கண்டுபிடித்தேன். அதை முயன்றுகொண்டிருந்தபோது, ஒரு தேவனும், அசுரனும் வேகமாக வந்தார்கள். என் வீட்டுக் கதவருகே சந்தித்துக் கொண்ட அவர்கள், என்னுடைய சந்தோஷத்தைக் கண்டு, சண்டையிடத் தொடங்கினார்கள்; ‘அது மிகவும் புனிதமானது’, ‘இல்லை அது பாவச் செயல்’ என்று.